Fact Check
சென்னை அரும்பாக்கம் மக்கள் நிலை என்று பரவும் சில புகைப்படங்கள் தற்போது எடுக்கப்பட்டதா?
சென்னை அரும்பாக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் என்று பல்வேறு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள ராதா கிருஷ்ணன் நகர் பகுதியில், கூவம் நதியினை ஒட்டி கட்டப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட வீடுகள் மாநகராட்சி அதிகாரிகளால் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழக அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து, அச்சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் என்று சமூக வலைத்தளத்தில் பல்வேறு புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால், அவற்றில் பழைய புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
சென்னை அரும்பாக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் நிலை என்று பரவும் புகைப்படங்களின் உண்மைத்தன்மைக் குறித்து ஆராய்ந்தோம்.
பிரபலங்கள் உட்பட பலரும் பகிர்ந்திருந்த புகைப்படங்களில் முதலாவதாக இடம்பெற்றிருந்த புகைப்படம் சுவரில் அம்பேத்கர் வரைபடம் இடம்பெற்றிருந்த புகைப்படம். அதனை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது, கேரளாவில் இருந்து “மத்யமம்” என்கிற பெயரில் செயல்பட்டு வருகின்ற டிஜிட்டல் செய்தித்தாளில் ஆங்கிலத்தில் இடம்பெற்றிருந்த கட்டுரைகளில் ஜனவரி 27, 2021 அன்று குறிப்பிட்ட இந்த வைரல் புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளன.

அதேபோன்று, சிறுவர் சிறுமியர் சிலர் இடிபாடுகளில் தேடுவது போன்ற புகைப்படம் ஒன்று கடந்த டிசம்பர் 09, 2020ல் கூவம் பகுதியில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு எதிராக போராடிய மக்கள் என்கிற தலைப்பில் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளிவந்த செய்தியில் இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து, கைக்குழந்தை ஒன்றுடன் பெண் ஒருவர் நிற்கும் புகைப்படம் டிசம்பர் 11, 2020 அன்று தமிழ் சமயம் டிஜிட்டல் இதழ் வெளியிட்டுள்ள சென்னை காந்திநகர் பகுதி மக்கள் வெளியேற்றம் குறித்த செய்தியில் இடம்பெற்றுள்ளது.

Conclusion:
சென்னை அரும்பாக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் நிலை என்று பரவும் புகைப்படங்களில் பெரும்பாலானவை பழைய செய்திகளில் இடம்பெற்றுள்ளவை என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources:
Tamil Samayam: https://tamil.samayam.com/latest-news/state-news/chennai-cooum-river-side-people-losing-their-livelihood/articleshow/79678437.cms
The New Indian Express: https://www.newindianexpress.com/cities/chennai/2020/dec/09/chennai-slum-dwellers-stand-neck-deep-inside-sewage-laden-cooum-for-hours-protesting-eviction-2233992.html
Puthiyathalaimurai: https://www.puthiyathalaimurai.com/newsview/111316/DMK-government-atrocity-to-evict-Arumbakkam-people-says-Seeman
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)