Fact Check
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசுப்பணி தரப்படவில்லையா?
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்தத் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசுப்பணி தரப்படவில்லை என்று தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்கள் தமிழக முதல்வர் மீது குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளார்.

Fact Check/Verification
கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்தப் போராட்டத்தில் காவல்துறையினர் நடத்தியத் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலரும் காயமடைந்தனர்.
இந்நிலையில் கனிமொழி அவர்கள்,
“தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினர் எங்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ற அரசுப் பணி வழங்குங்கள் என்று தொடர்ந்து கோரி வருகின்றனர். அரசுதான் செவிசாய்க்க மறுக்கிறது. இன்று தூத்துக்குடி செல்லும் முதல்வர் இது குறித்து உத்தரவிடுவாரா ?”
என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் குறித்து குற்றச்சாட்டு ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
கனிமொழி அவர்களின் இக்குற்றச்சாட்டின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் இக்குற்றச்சாட்டுக் குறித்து ஆராய முடிவெடுத்தோம்.
உண்மையும் பின்னணியும்
கனிமொழி அவர்களின் குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்து அறிய, இதுக்குறித்து தீவிரமாக ஆராய்ந்தோம்.
அவ்வாறு ஆராய்ந்ததில் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையத் தளமான https://www.tn.gov.in/ – இல் செய்தி வெளியீடு ஒன்றைக் காண முடிந்தது.

அதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தூத்துக்குடி போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் 10 வாரிசுதாரார்களுக்கும், பலத்த காயமடைந்த 5 நபர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களின் 4 வாரிசுதாரர்களுக்கும் என மொத்தம் 19 நபர்களுக்கு 27/09/2018 அன்று அரசுப்பணி நியமண ஆணை வழங்கினார் என்ற தகவலை நம்மால் காண முடிந்தது.
இதைத் தவிர்த்து, 27/05/2018 அன்று, இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு 20 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு 5 இலட்சமும், மற்றும் இலேசானக் காயமடைந்தவர்களுக்கு ஒரு இலட்சமும் நிவாரணமாக வழங்கப்பட்டது என்ற ஒரு தகவலையும் நம்மால் காண முடிந்தது.
அந்த அறிக்கை உங்கள் பார்வைக்காக:
இந்த செய்தி அறிக்கையுடன், முதல்வர் பணி நியமண ஆணையை வழங்கும் ஒரு புகைப்படமும் நமக்கு கிடைத்தது.
அப்படம் உங்கள் பார்வைக்காக

நமது விரிவான ஆய்வின் மூலம் நமக்குத் தெளிவாகுவது என்னவென்றால்,
- கனிமொழி அவர்கள் குற்றம் சாட்டியதைப் போல் தமிழக முதல்வர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை கண்டுக் கொள்ளாமல் விட்டு விடவில்லை.
- தமிழக முதல்வர் 2018 ஆம் ஆண்டே அவர்களுக்கான நிவாரணத்தையும், அரசுப் பணிகளையும் வழங்கி விட்டார்.
Conclusion
தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக் குறித்துத் தெரிவித்த குற்றச்சாட்டானது முற்றிலும் தவறானதாகும். இதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பாக ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
Result: Incorrect
Our Sources
Ms. Kanimozhi: https://twitter.com/KanimozhiDMK/status/1326364680890183682
Tamilnadu Government: https://www.tn.gov.in/pressrelease/releasedate_search/2018-09-27
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)