Fact Check
வட மாநிலத்தவருக்கு இட ஒதுக்கீடு தருவது தப்பில்லை என்றாரா ஹெச்.ராஜா?
வட மாநிலத்தவருக்கு தமிழகத்தின் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அளிப்பதில் தவறில்லை என்று பாஜக மூத்தத் தலைவர் ஹெச்.ராஜா அவர்கள் கூறியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தமிழகத்தில் சமீப காலமாக வட இந்தியர்களை விரோத நோக்கில் பார்க்கும் பார்வை அதிகரித்து வருகின்றது. தமிழகத்தின் வேலைவாய்ப்புகளிலும், கல்வி நிறுவனங்களிலும் வட இந்தியர்கள் அளவுக்கதிகமாக ஊடுருவியதே இதற்கு காரணம்.
மத்தியில் ஆளும் பாஜக திட்டமிட்டே இந்த ஊடுருவலை நிகழ்த்தி வருவதாக ஒரு புகார் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றது. போதா குறைக்கு பாஜக தனது தேர்தல் அறிக்கையில் “வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதிகள் செய்து தரப்படும்” என்று கூறியுள்ளது . இந்த அறிக்கை இந்த புகாருக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவரும், காரைக்குடி வேட்பாளருமான ஹெச்.ராஜா அவர்கள் வட மாநிலத்தவருக்கு தமிழகத்தின் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அளிப்பதில் தவறில்லை என்று கூறியதாக விகடன் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Archive Link: https://archive.ph/mMNk9

Archive Link: https://archive.ph/2mLZg

Archive Link: https://archive.ph/rHnkg
சமூக வலைத்தளத்தில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
வட மாநிலத்தவருக்கு தமிழகத்தின் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அளிப்பதில் தவறில்லை என்று ஹெச்.ராஜா கூறியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதைத் தொடர்ந்து, இத்தகவல் பரவுவதற்கு அடிப்படையான விகடனின் புகைப்படச் செய்தி உண்மையானதுதானா என்பதை அறிய முற்பட்டோம்.
இதற்காக விகடனின் சமூக வலைத்தளப் பக்கங்களில் இவ்வாறு ஒரு புகைப்படச் செய்தி வந்துள்ளதா என்பதை தேடினோம். அவ்வாறு தேடியதில் இப்புகைப்படச் செய்தி குறித்த உண்மைத்தன்மையை நம்மால் அறிய முடிந்தது.
உண்மையில் வைரலாகும் இப்புகைப்படச் செய்தி போலியாக எடிட் செய்யப்பட்ட ஒன்றாகும். கடந்த 2018 ஆம் ஆண்டு ஹெச்.ராஜா விகடனுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்பேட்டியில் “ தமிழக மக்கள் ஓட்டுப் போட்டு பாஜக ஆட்சிக்கு வரவில்லை!” என்று பேசியுள்ளார்.
இந்த கருத்தை விகடன் புகைப்படச் செய்தியாக வெளியிட்டுள்ளது.
இந்த புகைப்படச் செய்தியையே எடிட் செய்து, வட மாநில மக்கள் இந்தியர்கள் இல்லையா? அவர்களுக்கு தமிழக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அளிப்பதில் என்ன தவறு” என்று ஹெச்.ராஜா பேசியதாக சமூக வலைத்தளங்களில் தற்போது பரப்பப்பட்டு வருகின்றது.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையானப் படத்தையும், எடிட் செய்யப்பட்டப் படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Conclusion
வட மாநிலத்தவருக்கு தமிழகத்தின் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அளிப்பதில் தவறில்லை என்று ஹெச்.ராஜா அவர்கள் பேசியதாக பரப்பப்படும் புகைப்படச் செய்தி போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Vikatan: https://twitter.com/vikatan/status/1075259335415160832
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)