Fact Check
சீமான் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு சென்றாரா?
சீமான் அவர்கள் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு சென்றதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Fact Check/ Verification
தீவிரமான கடவுள் மறுப்பு கொள்கையும், திராவிட மறுப்பு கொள்கையும் உடையவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். குறிப்பாக கூற வேண்டுமென்றால் ஆரிய வழிபாட்டைத் தொடர்ந்து எதிர்த்து பேசி வருகின்றார்.
தமிழ்நாட்டில் இருக்கும் கோவில்களுக்கு தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும், புராணக் கடவுள்களை மறுத்து குலதெய்வ வழிப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என மதம் குறித்தும், வழிபாடு குறித்தும் தொடர்ந்து பேசி வருகின்றார்.
இந்நிலையில் சீமான் அவர்கள் தன் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று, அவர் மகனின் எடைக்கு எடை துலாபாரம் அளித்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் இத்தகவலை ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்
சீமான் திருப்பதி கோயிலுக்கு சென்றதாகப் பரவும் புகைப்படத்தின் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மைக் குறித்து அறிய வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம்.
இவ்வாறு செய்ததால் இந்நிகழ்வில் எடுத்த வேறு சில படங்களையும் நம்மால் காண முடிந்து. அப்புகைப்படங்களில் ஒன்றினுள் ‘துலாபாரம்’ என்று தமிழில் எழுதிய பெயர்ப்பலகை ஒன்று இருப்பதையும் நம்மால் காண முடிந்தது.

இதன்படி பார்க்கையில் இப்புகைப்படங்கள் கண்டிப்பாக திருப்பதியில் எடுக்கப்பட்டதில்லை என்பது நமக்கு தெளிவாகியது.
இதன்பின் ஆய்வின் அடுத்தக் கட்டமாக, இந்தப் புகைப்படங்கள் உண்மையில் எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்து தேடினோம்.
அவ்வாறு தேடியதில் இப்புகைப்படங்கள் திருப்போரூர் கந்தசாமி கோவிலில் எடுக்கப்பட்டது என்று நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் சிலரால் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது.
மேலும் “Gautham Says’ எனும் யூ டியூப் சேனலில் திருப்போரூர் கந்தசுவாமி கோயில் குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது.
இந்த வீடியோவில் திருப்போரூர் கந்தசுவாமி கோயிலின் துலாபாரம் பகுதியும் இடம்பெற்றிருப்பதையும் நம்மால் காண முடிந்தது.
இந்த துலாபாரம் பகுதியும் சீமான் குறித்து பரவும் புகைப்படத்தில் இருக்கும் பகுதியும் ஒரே பகுதிதான் என்பதை நம்மால் அறிய முடிகிறது. வாசகர்களின் தெளிவுக்காக இவ்விரு புகைப்படங்களையும் கீழே ஒப்பிட்டு காட்டியுள்ளோம்.


இதன்படி பார்க்கையில் சீமான் அவர்கள் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு சென்றதாக சமூக வலைத்தளங்களில் பரப்படும் தகவல் தவறானது என்பது நமக்கு உறுதியாகிறது.
Conclusion
சீமான் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு சென்றதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் பொய்யானது என்பதையும் வைரலாகும் புகைப்படங்கள் திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் எடுக்கப்பட்டது என்பதையும் உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources
Twitter Profile: https://twitter.com/Jeyankumari/status/1348652676892876801
Twitter Profile: https://twitter.com/VijayalashmiR/status/1348681709127045121
Gautham says: https://www.youtube.com/watch?v=X-mgVPy87uo
Twitter Profile: https://twitter.com/stalin_germany2/status/1348630744726343691
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)